திருப்போரூர் பஸ் நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம்: பொதுமக்கள் வாக்களித்தனர்

திருப்போரூர்: திருப்போரூர் பஸ் நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் வைக்கப்பட்டது. இதில், பொதுமக்கள் ஏராளமானோர், ஆர்வத்துடன் வாக்களித்தனர். திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் சிறப்பு பிரிவு சார்பில் திருப்போரூர் பஸ் நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. பஸ் நிலையத்துக்கு வந்த பொதுமக்கள், கல்லூரி மாணவிகள், மூத்த குடி மக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் முறை, வாக்களிப்பது எப்படி, வாக்களித்த பிறகு செலுத்திய வாக்குக்கு ரசீது பெறும் முறை ஆகியவை குறித்து துணை வட்டாட்சியர் ஜீவிதா, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சசிகுமார், வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, வி.ஏ.ஓ. வேலு ஆகியோர் விளக்கினர்.

இந்த முகாமில் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து மாதிரி வாக்களித்தனர். இதேபோல் திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வாகனத்தில் தேர்தலில் வாக்களிப்பது, தேர்தல் நாளன்று கடைபிடிக்க வேண்டிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் சதீஷ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் இரவிச்சந்திரன் ஆகியோர் இதில் கலந்துக் கொண்டனர்.

Related Stories: