*தினகரன் செய்தி எதிரொலி
சேந்தமங்கலம் : எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம் பகுதியில் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் கொல்லிமலை இருந்து ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தவிர, ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகள், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுக்–்கு நிலத்தடி நீராதாரமாக விளங்குகிறது. இந்த ஏரிக்கரை வழியாக நாமக்கல்-துறையூருக்கு சாலை செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த ஏரிக்கரை சாலையில் நடப்பட்டுள்ள மின்சார கம்பங்கள், சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பலமுறை மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகள், ஆபத்தான நிலையில் சாய்ந்திருந்த மின்கம்பத்தை சரி செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.