திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதாக ேநாயாளிகள் அவதிக்கு ஆளாகின்றனர். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 1500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக சுமார் 600 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு நாளுக்குநாள் நோயாளிகள் கூட்டம் அதிகரித்ததால் 200 படுக்கை அறை கொண்ட கட்டிடம் கட்டினர். பிரசவ வார்டு தனியாக அமைக்கப்பட்டது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை.
இதனால் நோயாளிகள் சிலரை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை உள்ளது. குறிப்பாக பெண் ஒருவர் கையில் ஊசி ஏத்தும் பேண்டேஜுடன் தனது கைக்குழந்தையுடன் தரையில் படுத்திருப்பது காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து நோயாளிகளிடம் கேட்டபோது, ‘திண்டுக்கல் ஜிஹெச்சில் போதிய படுக்கை வசதி இல்லாததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். தற்போது பனிக்காலம் என்பதால் இரவில் தரையில் படுக்கவே மிகவும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டால் படுக்கை வசதி இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வோம் என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திண்டுக்கல் ஜிஹெச்சில் உடனடியாக நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.