நாகர்கோவில்: நாகர்கோவில் வெட்டூணிமடம் பகுதியில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் வெட்டூர்ணிமடம் பகுதியில் அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இந்த சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையொட்டி உள்ள திருப்பம், அபாயகரமான திருப்பமாக உள்ளது. பல சமயங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களும் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக இந்த பகுதியில் உள்ள பள்ளி எதிரில், சாலை ஓரத்தில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. நாள் தோறும் கட்டிட கழிவுகளை கொண்டு வந்து கொட்டி மலை போல் குவித்து வருகிறார்கள்.