நாகர்கோவில்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் அரசு அலுவலகங்கள், அரசு வாகனங்களில் இருந்த முதல்வர் படம் அகற்றப்பட்டது. குமரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் முதல்வர் படம் வைக்கப்பட்டு இருந்தன. சில அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களும் இருந்தன. இவை அனைத்தும் அகற்றப்பட்டது. நேற்று நடத்தப்பட இருந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமும் ரத்து செய்யப்பட்டது.
நேற்று காலை முதல் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிப்பு மற்றும் போஸ்டர்கள் கிழிப்பு நடவடிக்கைகள் தொடங்கின. மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில், நாகர்கோவிலில் நேற்று கோட்டார், வடசேரி, செட்டிக்குளம் பகுதிகளில் போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றினர்.