செங்கல்பட்டு: திருவண்ணாமலை, நியூ கார்க்கானா நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கவின்குமார் (23). சென்னையில் ஆதம் (23) என்ற நண்பர் உள்பட சிலருடன் தங்கி, தனியார் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கவின்குமார், ஆதாம் ஆகியோர் திருவண்ணாமலைக்கு பைக்கில் புறப்பட்டனர். செங்கல்பட்டு பைபாஸ் சாலை, வித்யாசாகர் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே கோவில்பட்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் சென்று, பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கவின்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். ஆதமுக்கு 2 கால்களும் முறிந்தன. அதேபோல் காரில் வந்த குடும்பத்தினரும், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.