சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் எடப்பாடி படம் அகற்றப்பட்டது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால், சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி படம் நேற்று அகற்றப்பட்டது. அதேபோன்று, சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வர் எடப்பாடி படம் அகற்றப்பட்டு விட்டது.