சென்னை: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
அவற்றின் விவரம் வருமாறு:
* எந்த அரசு அலுவல் சார்ந்த பிரசாரமும், தேர்தலுடன் கலக்கப்படக் கூடாது .* வாக்காளர்களிடம் ஜாதி, வகுப்புவாத உணர்வுகளின் அடிப்படையில் வாக்கு கேட்க கூடாது.
* ஜாதி, மத, மொழி, இன ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக்கூடாது. * உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாற்று கட்சியின் செயல் திட்டங்கள், மாற்று கட்சியின் தனி நபர்கள் பற்றி விமர்சிக்க கூடாது.* கோவில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டு தலங்களில், நோட்டீஸ் ஒட்டுதல், பாடல் ஒலிபரப்புதல் உள்பட தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது. * வாக்காளர்களை கவரும் விதத்தில் பணம் கொடுத்தல், வாக்களிக்கும்படி மிரட்டுதல், வேறு விதத்தில் முயற்சித்தல், வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஓட்டு சேகரிப்பு செய்தல் கூடாது.* பிரசார கூட்டத்தை தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரம் முன்பாக முடித்து கொள்ளாமல், தொடரக் கூடாது.* வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது.* தனிநபரின் விருப்பமின்றி அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடத்த கூடாது. * அரசியல் கட்சிகள், தேர்தலை வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையாகவும் நடத்த, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கூடாது.* தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியின் தங்களது முகவர்கள், நிர்வாகத்தினர் பெரிய தொகையை எடுத்து செல்லக் கூடாது.* அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளரோ பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பொதுக்கூட்டம், பேரணி, ஊர்வலம் நடத்தக் கூடாது.* ஒரு கட்சியின் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தில், வேறொரு கட்சியின் ஊர்வலத்துக்கு அனுமதியில்லை.* ஊர்வலத்தில் எந்த பிரசுரங்களையும் கொண்டு வர அனுமதியில்லை. * ஒரு கட்சியினர் ஒட்டும் போஸ்டர்களை, மாற்று கட்சியினரோ வேட்பாளர்களோ அகற்றக் கூடாது. போஸ்டரில் உள்ள முகத்தை மறைக்கவும் கூடாது.* போஸ்டர்கள், கொடிகள், சின்னங்கள் அல்லது மற்ற பிரசார வெளியீடுகள் தேர்தல் நடக்கும் நாளில் காண்பிக்கக் கூடாது.* ஸ்பீக்கர்களை இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை பயன்படுத்தக் கூடாது.* எழுத்துப்பூர்வமான முன் அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலத்தில் பயன்படுத்தக் கூடாது.* இரவு 10 மணிக்கு மேல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.* உள்ளூரில் நடைபெறும் திருவிழாக்கள், சீதோஷ்ண நிலை மாற்றம், பாதுகாப்பு காரணங்கள், தேர்வுகள் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டும் பிரசாரத்துக்கான அனுமதி முடிவு செய்யப்படும்.* தேர்தல் பணிகளின்போது மதுபானப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.