தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன்கள் தள்ளுபடி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: சுய உதவி குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுவினர் வாங்கிய கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த 20ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு:கிராமப்புறங்களிலும், நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. இன்றைய அளவில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுக்களில் உள்ள பெண்கள், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சிறுதொழில் செய்யவும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர்.

கடந்த 2019 பிப்ரவரி முதல் கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.  இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது.  தமிழ்நாடும் இதன் பாதிப்புக்கு உள்ளாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, தேவைப்படும் தளர்வுகளுடன் அது தொடர்ந்து அமலில் உள்ளது. நோய்த் தொற்றாலும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களை குறைக்க, நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, பருப்பு போன்றவை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கியதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரொக்க உதவியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ உதவிகளையும் அரசு வழங்கியது.

இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சுய உதவி குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும், அவர்களின் துயரை துடைக்க தமிழ்நாடு அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்துள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 20ம் தேதி நடந்த “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுவினர் வாங்கிய கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் சுய உதவி குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன் தள்ளுபடி  செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நகைக்கடன் தள்ளுபடி

சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக்கடன் பெற்று அதை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டும், இதுகுறித்து பெறப்பட்ட கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்தும், பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படியும், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக அதிமுக அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்கிறது.

Related Stories: