எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை அண்ணா பல்கலை பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி பி.புகழேந்தி முன்  விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள், இந்த படிப்பை பல்கலைக்கழகம்  தொடர்ந்து நடத்த என்ன செய்வது, இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தி, அடுத்தாண்டு முதல் மத்திய அரசு இடஒதுக்கீடு முறையை பின்பற்றலாம். 45 மாணவர்களை சேர்ப்பதால் எந்த சிக்கலும் ஏற்படாது. இந்த வழக்கு எம்.டெக் படிப்பில் இருந்து இட ஒதுக்கீடு பிரச்னைக்கு திசை மாறி செல்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாதா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி புகழேந்தி நேற்று தீர்ப்பளித்தார். அதில், மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தரப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தாண்டு மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில்  மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்  என்று கூறியுள்ளார்.

Related Stories: