திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க தடை கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அறநிலையத் துறை சார்பில் திருக்கோயில்களின் விழாக்களை ஒளிபரப்புவதற்காக, 8.77 கோடி ரூபாய் மூலதன செலவில் திருக்கோயில் என்ற பெயரில் தொலைக்காட்சி துவங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அறநிலைய துறைத் பொது நல நிதியை, தொலைக்காட்சி துவங்க பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, கடந்த டிசம்பர் மாதம் விசாரித்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்த கருத்துக்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், திருக்கோயில் தொலைக்காட்சிக்கு அறநிலைய பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர். இறை பக்தியை பக்தர்களுக்கு தெரிய வைக்கவும், திருப்பணி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதும் உலகெங்கும் நடைபெறும் செயல்தான். இது அரசின் கொள்கை முடிவு. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: