சென்னை: வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு வழித்தடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த வழித்தடங்களில் பணிகள் சரிவர முடிக்கப்படாமல் அவசர கதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை காலை முதல் இயங்க தொடங்கியது. ஆனால், காலை 6 மணி முதலே சேவையில் பல்வேறு பிரச்னை எழுந்தது. சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் மற்றும் தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரங்களில் திடீரென கோளாறு ஏற்பட்டது.