செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உயிர் காக்க உதவும் அத்தியாவசிய மருந்துகள் பற்றாகுறையாக இருப்பதால், போதிய அளவு அவற்றை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து, மாவட்டத் தலைவர் நந்தன், மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன் ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வர் சாந்திமலரை, நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மருத்துவமனையின் அனைத்து வழிகளையும் பொது மக்களின் பயன்பாட்டுக்கு உடடியாக திறந்துவிட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் வழிகாட்டி பலகை வைப்பதோடு, நோயாளிகளை ஸ்டெரச்சரில் கொண்டு செல்லும் வழிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். நோயாளிகளை கொண்டு செல்ல தனி வழிகளை அமைக்க வேண்டும். விடுமுறை நாட்களில் நரம்பியல், அறுவை சிகிச்சை உள்பட அனைத்து துறைகளிலும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை, மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.