1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் கோரிக்கை

சென்னை: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க தமிழக அரசுக்கு, தனியார் பள்ளி கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வகுப்பறையில் 25 மாணவர்கள் வீதம், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய இளங்கோவன், கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

இதனால், தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை, பகுதிநேர ஊதியமாக வழங்கப்பட்டு வந்துள்ளது என கூறினார். மேலும், தனியார் பள்ளிகள் ஒற்றுமை இன்றி போட்டிப் போட்டுக் கொண்டு பள்ளி கட்டணத்தை உயர்த்தியும், தாழ்த்தியும் வாங்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, சங்கத்தின் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், தமிழகத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Related Stories: