சென்னை மாதவரத்தை சேர்ந்தவர்கள் அரசு பஸ் மீது கார் மோதி 2 தம்பதிகள் நசுங்கி பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வேங்கிக்கால் மின் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீபால்(42). அவரது மனைவி பத்மபிரியா(36). அவர்களது மகன் ஆர்யா(12). மகள் மிருதுளா(8). சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக ஸ்ரீபால் பணிபுரிந்தார். எனவே, குடும்பத்தினருடன் சென்னை மாதவரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், திருவண்ணாமலையில் இன்று நடைபெறவிருந்த உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, ஸ்ரீபால் குடும்பத்தினருடன் காரில் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார்.

அவருடன், மாதவரம் எட்டியான் நகரை சேர்ந்த மாமனார் சதீஷ்குமார்(68), மாமியார் சாந்தி(63) ஆகியோரும் வந்தனர். திருவண்ணாமலை- வேலூர் சாலையில் ஊசாம்பாடி கிராமத்துக்கு அருகே நேற்று மதியம் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து வேலூர் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது நேருக்குநேர் மோதியது. இதில் கார் நொறுங்கியது. அரசு பஸ்சும் சாலையோரம் கவிழ்ந்தது. இதில், காரில் வந்த ஸ்ரீபால், மனைவி பத்மபிரியா, மாமியார் சாந்தி, மாமனார் சதீஷ்குமார் இறந்தனர். பஸ் டிரைவர் முத்துசாமி, கன்டக்டர் வெங்கடேசன்(57) உட்பட 25க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

Related Stories: