திருவில்லிபுத்தூர் அருகே காட்டுப்பன்றி கூட்டத்தால் கண்டமான மக்காச்சோளம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து மக்காளச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செவலஊரணி, செண்பகத்தோப்பு பகுதிகளில் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பல ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காச்சோளப் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக விவசாய நிலத்தில் புகுந்து மக்காச்சோளத்தை சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து கம்மாபட்டி பகுதியை சார்ந்த விவசாயி நிறைகுளம் கூறுகையில், ``ஏற்கனவே தொடர்ச்சியான மழையால் மக்காச்சோளப் பயிரில் அழுகல் ஏற்பட்டு பாதிப்பு அடைந்துள்ளோம். இதில் மேலும் கஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே, அவற்றின் நடமாட்டத்தை வனத்துறை தடுக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என தெரிவித்தார்

Related Stories: