விபத்து ஏற்பட்டால் பஸ்சை விட்டு செல்லக்கூடாது: ஓட்டுனர், நடத்துனர்களுக்கு எம்டிசி உத்தரவு

சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் இளங்கோஅனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போக்குவரத்துக்கழகத்தில் பணிமனைகளில் இருந்து பேருந்தை தடத்தில் இயக்கும் போதும், பணி நேரத்தில் தடப்பழுது (பிரேக்டவுன்) மற்றும் விபத்து ஏற்படும் போது பேருந்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை விட்டு, விட்டு செல்லக்கூடாது. ஏதேனும் இருவரும் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட கண்டிப்பாக பேருந்தில் ஓட்டுனர், நடத்துனரில் யாராவது ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் சில நேரங்களில் பேருந்தை விட்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட கிளைமேலாளரிடம் தெரிவித்து பேருந்திற்கு மாற்று பணியாளர்கள் வந்த பிறகு பேருந்தினை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தான் செல்ல வேண்டும்.

மேலும் சுழற்சி முறையில் பணிபுரியும் பேருந்துகள், பேருந்து நிலையத்தில் பணி முடித்து செல்லும் போது அந்த பேருந்திற்கு மாற்று நடத்துனர் அல்லது ஓட்டுநர் வந்த பிறகு அவர்களிடம் பணி அட்டையை ஒப்படைத்து தான் செல்ல வேண்டும். இதை அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: