சென்னை: தமிழகத்தில் புரேவி மற்றும் நிவர் புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 286.91 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டாவது முறையாக வந்த மத்திய குழு ஆய்வு செய்து டெல்லி திரும்பியது. மேலும் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு கண்டிப்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்கு பிறகு விவசாயிகளுக்கு உரிய நிவாரண நிதி வழங்கப்படும் என குழு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தின் ஆலோசனைக்கு பிறகு தற்போது தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 3,113.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.