மெரினாவில் குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்களின் உடல் கரை ஒதுங்கியது

சென்னை: மெரினா  கடலில் குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்களின் உடல் நேற்று கரை ஒதுங்கியது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த சிவபாஜி (18), ஆவடியில் உள்ள பிரபல தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தன்னுடன் படிக்கும் நண்பர்களான ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் (18), ராஜசேகர் (19), சிவபிரசாத் (18), கோபிநாத் (18) ஆகியோருடன் மெரினா வந்து கடலில் குளித்தார்.அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிவபாஜி, ஆகாஷ், கோபிநாத் ஆகியோர் சிக்கி மாயமாகினர். தகவலறிந்து மெரினாவில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கடலில் இறங்கி 3 மாணவர்களை தேடினர். அதில் சிவபாஜி மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். ஆகாஷ் மற்றும் கோபிநாத் ஆகியோர் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆகாஷ் மற்றும் கோபிநாத் உடல்கள் நேற்று மதியம் எம்ஜிஆர் நினைவிடம் அருகே கரை ஒதுங்கியது. அண்ணாசதுக்கம் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: