அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் ஓபிஎஸ், தங்களின் குறைகளை கேட்காமல் திரும்பி சென்றதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட், பல்வேறு தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் திடீரென கோயம்பேடு மார்க்கெட் வந்து காய்கறி, பழம் மற்றும் உணவு தானிய கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். கோயம்பேடு நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் உட்பட உயரதிகாரிகள் பலர் உடனிருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த சிறு, குறு வியாபாரிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை துணை முதல்வரிடம் தர முற்பட்டனர்.