கொரோனா தடுப்பூசி போடுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: கொரோனா தொற்று பரவாமல்  இருக்க முதலில் சுகாதார மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளையும் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சமூக நீதி முன்னேற்றத்துக்கான மைய இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், கொரோனா தடுப்பு விதிகளான தனி மனித விலகல், முக கவசம் அணிவது போன்றவற்றை பின்பற்றுவதில் சவால்களை சந்திப்பதால் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பேர், தொற்று பாதித்து, உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்கு குறைவான, பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்னுரிமை அளித்த மத்திய அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க தவறிவிட்டது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு 3 வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய,  மாநில சுகாதார துறைகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: