சசிகலாவால் எழுச்சி உருவாகவில்லை : டிடிவி தினகரன் மீது மாபா பாண்டியராஜன் தாக்கு

சென்னை: சசிகலா வருகையால் எழுச்சி வந்துவிட்டதாக போலி பிம்பத்தை உருவாக்குகிறார் டிடிவி.தினகரன். அது உண்மையில்லை என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை நேற்று திறந்து வைத்த அமைச்சர் மாபா பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வின் தாக்கம் பெரிதளவில் இருக்கும் என்று, எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் வரை சென்று போராடினோம். ஆனால், தீர்ப்பு எதிராக வந்து விட்டது. பின்பு, உள் ஒதுக்கீடு கொண்டு வந்து 435 மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கி இருக்கிறது அதிமுக அரசு. தமிழகம் அனைத்து துறைகளிலும் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது.

அனைவரும் அவரவர் பணிகளை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வர இருக்கும் சூழ்நிலையில், அரசு திட்டங்களை விரைந்து முடிப்பதில் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம். எங்களுக்கு எந்த தேர்தல் பற்றியும் கவலை இல்லை. யார் வருவார்கள், யார் போவார்கள் என்று எங்களுக்கு கவலை இல்லாமல் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறோம். அமமுகவிற்கு சென்ற பலர் தற்போது திரும்பி அதிமுகவிற்கு வந்து விட்டார்கள். அதிமுகவை கைப்பற்றுவோம் என்று டிடிவி தினகரன் கூறுவது வெற்று பேச்சு. சசிகலா வருகையால் ஏதோ எழுச்சி வந்தது போல் ஒரு போலி பிம்பத்தை உருவாக்குகிறார் டிடிவி தினகரன். அதில் உண்மை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: