மதுரை: மதுரை, தத்தநேரியைச் சேர்ந்த சவுந்தர்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காற்றாலைகளில் சிக்கியும், உயர்மின் அழுத்த கம்பிகளில் சிக்கியும் அதிகளவில் பறவைகள் உயிரிழக்கின்றன. இதனால், அரியவகை பறவையினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. பறவைகள் காற்றாலைகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க, வழிகாட்டுதல்கள் உள்ளன. இவற்றை யாரும் முறையாக பின்பற்றுவதில்லை. எனவே, தமிழகத்திலுள்ள காற்றாலைகளில் ஆய்வு செய்து, வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளனவா? குறிப்பாக ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.