சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை..! ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை

சென்னை: சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை சசிகலா சென்னை திரும்புகிறார். சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி விடுதலையானார்.

 விடுதலை நெருங்கிய நேரத்தில் அவர் கொரோனாவின் பிடியில் சிக்கி, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார். தற்போது டாக்டர்கள் அறிவுரையின்படி பெங்களூருவில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்தநிலையில் ஒரு வாரம் தனிமை முடிந்து, சசிகலா பெங்களூருவில் இருந்து நாளை புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.

சசிகலாவுக்கு தமிழக-கர்நாடகா எல்லையில் இருந்து வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படும் என்று அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். அதன்படி சென்னையில் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: