6 ஆண்டாக காதலித்துவிட்டு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் காதலி, தாயை எரித்து கொன்றுவிட்டு மாநகராட்சி ஊழியர் தீக்குளித்து சாவு: கொருக்குப்பேட்டையில் பயங்கரம்

சென்னை: வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம்  செய்த காதலியை, தாயுடன் எரித்து கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்டார். சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் 2வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் வெங்கட்டம்மா (46). இவரது கணவர் வெங்கடேஷ்வரலு. மாநகராட்சி ஊழியர். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகள் ரஜிதா (26). தந்தை இறந்துவிட்டதால் ரஜிதாவுக்கு மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்தில் ஊழியராக பணி வழங்கப்பட்டது.அதே பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (32) சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும், ரஜிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 6 ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு வெங்கட்டம்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் ரஜிதாவுக்கும்,  அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும்  நிச்சயம் செய்துள்ளார். இதனிடையே, திருமண தேதியும் அறிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு வெங்கட்டம்மா வீட்டுக்கு குடிபோதையில் சென்ற பூபாலன், கதவை தட்டியுள்ளார். திறக்காததால் கோபமடைந்த பூபாலன், நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் மீது ஏறி ஓட்டை உடைத்து உள்ளே பெட்ரோல் கேனுடன் குதித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பூபாலன், தனது உடல் மீதும் வெங்கட்டம்மா, ரஜிதா உடல் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். வெங்கட்டம்மா வீட்டுக்குள் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆர்.கே.நகர் போலீசார், தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 3 பேரும் தீயில் எரிந்து கருகி கரிக்கட்டையாக கிடந்தனர். இதையடுத்து 3 பேரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Related Stories: