வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன, என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரம்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன.

இந்த முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. முகாமில் 30 வயதிற்கு உட்பட்ட 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை,  அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் 10க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: