சென்னை: அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க கால நீட்டிப்பு கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்துள்ள முறைகேடு புகார்களை விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை 2020 நவம்பர் 11ம் தேதி அமைத்தது. மூன்று மாதத்திற்குள் சூரப்பா மீதான புகார்களை விசாரித்து அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தியிடம், சூரப்பா மீதான புகார்கள் குறித்த ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி விசாரணை குழு கேட்டும் ஒப்படைக்காததால் பதிவாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஆணையம் கேட்ட ஆவணங்களை பதிவாளர் கருணாமூர்த்தி அரைகுறையாக சமர்ப்பித்தார்.