காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுமார் ஓராண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார். தமிழக அரசு உத்தரவின்படி கோவிட் -19 கட்டுப்பாடுகளுக்கு பின் நேற்று உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் முதியோர், கல்வி, மாற்று திறனாளிகள், திருமணம், விதவை ஆகியோருக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பசுமை விடுகள், குடும்ப அட்டை, பட்டா மாற்றம், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 174 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) தர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சுமதி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.