கூரம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கூரத்தாழ்வார் 1011வது மகோற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் உள்ள ஆதிசேகவ பெருமாள் கோயிலில் கூரத்தாழ்வாரின் 1011 வது மகோற்சவம் கடந்த ஜன.24ஆம் தேதி தொடங்கி விமரிசையாக நடந்தது. கூரம் கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள்  கோயிலில் உள்ள கூரத்தாழ்வார் சன்னதியில் ஆண்டுதோறும் தை மாதம் கூரத்தாழ்வார் திருஅவதார விழாவை முன்னிட்டு, 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இதையொட்டி, இந்தாண்டு திருஅவதார விழா கடந்த 24ம் தேதி காலை  பல்லக்கு புறப்பாடுடன் உற்சவம் தொடங்கியது. மாலை சிம்ம வாகனத்தில் கூரத்தாழ்வார் எழுந்தருளி வீதியுலா வந்தார். இதை தொடர்ந்து தினமும் காலை பல்லக்கிலும், மாலை யாளி, சூர்ய பிரபை, சந்திரபிரபை, குதிரை வாகனம், யானை  வாகனம், ஹம்ஸ வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். உற்சவத்தின் 9ம் நாளான நேற்று கூரத்தாழ்வார் திருத்தேரில் எழுந்தருளி கிராமத்தில் வீதியுலா வந்தார். இதில் காஞ்சிபுரம்,  கூரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: