பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். தொழிலதிபரான இவர், கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி இறந்தார். இவரது மனைவி கலாவதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் தந்தை செல்வம் உயிருடன் இருந்தபோது 2 மகள்களுக்கும் வெகு விமரிசையாக திருமணத்தை நடத்தி வைத்தார். 3வது மகள் லெட்சுமிபிரபா மறைந்த செல்வத்தின் செல்ல மகள். லெட்சுமிபிரபாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பட்டுக்கோட்டையில் திருமணம் நடந்தது. இதையடுத்து, பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், பலரும் வியக்கும் வகையில், தந்தை-மகள் பாசத்தை உணர்த்தும் சிலை இருந்தது. அதாவது, லெட்சுமிபிரபாவின் திருமணத்தை அவரது தந்தை நடத்தி வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், காலதேவன் கோலத்தால் அவர் 9 ஆண்டுக்கு முன் மறைந்தார். எனினும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக மூத்த மகள்கள் திட்டமிட்டனர். இதற்காக, ஒரு சிலையை ஆர்டர் கொடுத்து வடிவமைத்தனர்.