9 ஆண்டுக்கு முன் இறந்த தொழிலதிபரின் சிலிக்கான் சிலை முன் மாலை மாற்றிய மகள்-மருமகன்: பட்டுக்கோட்டை அருகே திருமண வரவேற்பில் நெகிழ்ச்சி

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். தொழிலதிபரான இவர், கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி இறந்தார். இவரது மனைவி கலாவதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் தந்தை  செல்வம் உயிருடன் இருந்தபோது 2 மகள்களுக்கும் வெகு விமரிசையாக திருமணத்தை நடத்தி வைத்தார். 3வது மகள் லெட்சுமிபிரபா மறைந்த செல்வத்தின் செல்ல மகள். லெட்சுமிபிரபாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்   பட்டுக்கோட்டையில் திருமணம் நடந்தது. இதையடுத்து, பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், பலரும் வியக்கும் வகையில், தந்தை-மகள்  பாசத்தை உணர்த்தும் சிலை இருந்தது. அதாவது, லெட்சுமிபிரபாவின் திருமணத்தை அவரது தந்தை நடத்தி வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், காலதேவன் கோலத்தால் அவர் 9 ஆண்டுக்கு முன் மறைந்தார். எனினும்,  தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக மூத்த மகள்கள் திட்டமிட்டனர். இதற்காக, ஒரு சிலையை ஆர்டர் கொடுத்து வடிவமைத்தனர்.

தனது தந்தை செல்வமே நேரிலிருந்து மகள்-மருமகனை வாழ்த்துவதுபோல் சிலையை வடிவமைத்து நிற்க வைத்திருந்தனர். இந்த சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு வாழ்த்து பெற்றனர். இது, உறவினர்களையும், திருமண  வரவேற்புக்கு வந்திருந்தவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து பெண்ணின் மூத்த சகோதரி லண்டனில் வசித்து வரும் புவனேஸ்வரி கூறுகையில், ‘‘எனக்கு அடுத்த தங்கை திவ்யநாகபுஷ்பம்த்துக்கும்  திருமணத்தை சிறப்பாக நடத்திய  என் தந்தை, என் சகோதரி லெட்சுமிபிரபாவின் திருமணத்தின்போது இல்லை. எனவே, தங்கை திருமணத்தை அப்பா பார்க்கவில்லையே என்ற ஏக்கத்தை போக்கும் விதமாக அப்பா போன்று ஒரு உருவச்சிலையை செய்ய நானும், எனது கணவர்  கார்த்திக்கும் முடிவெடுத்தோம். இதையடுத்து, பெங்களூரில் 6 லட்சம் செலவில் சிலிக்கான் மற்றும் ரப்பரால் தத்ரூபமாக எங்கள் அப்பா உயரத்தை போலவே 5 அடி 7 அங்குலம் உள்ள சிலையை 6 மாதங்களாக உருவாக்கினோம். தற்போது  எங்கள் அப்பா எங்களுடன் இருப்பதுபோலவே எங்களுக்கு இருக்கிறது’’ என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.

Related Stories: