ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள கோயில்களில் ஜம்பொன் சிலைகளை கொள்ளையடித்து கேரளாவில் விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் மற்றும் ஆரணி பகுதிக்கு உட்பட்ட போந்தவாக்கம், அன்னதான காக்கவாக்கம், மதுரவாசல் மற்றும் பணப்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள அம்மன், பெருமாள் கோயில்களில் ஐம்பொன் சிலைகள் மற்றும் தாலிபொட்டுகள் தொடர்ந்து அடுத்தடுத்து திருடுபோனது. கோயில்களில் நடந்த கொள்ளை சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையிலான போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி அருகே செவிட்டு பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கவிச்செல்வமணி(21), அம்பேத்கர்(39) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில் மேற்கண்ட பகுதியில் கோயில்களில் கொள்ளையடித்தது தெரியவந்தது.