வேதாரண்யம் அருகே நடுக்கடலில் 5 மீனவர்கள் மாயம் இலங்கை சிறைபிடித்ததா?

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் இருந்து பைபர் படகில் கலையரசன் (25), குணபாலன் (25), முரளி (25), ஜானகிராமன் (23), திருமுருகன் (28) ஆகிய 5 மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை மீன் பிடிக்க சென்றனர். நேற்று காலை அனைவரும் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் 5 மீனவர்களும் கரை திரும்பவில்லை. இதனால் அச்சம் அடைந்த அவர்களின் உறவினர்கள் ஒரு படகில் சென்று நடுக்கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை தேடியும் மீனவர்கள் கிடைக்காததால் அவர்கள் கரை திரும்பி விட்டனர்.

இதையடுத்து இரண்டு படகில் ஊர் மீனவர்கள் நேற்று மாலை நடுக்கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் இலங்கை கடற்படை அவர்களை கைது செய்ததா அல்லது படகு திசைமாறி சென்றதா என தெரியாமல் உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர். இது குறித்து மீன்துறை அதிகாரிகளுக்கும், கடலோர காவல்படை குழுமத்திற்கும் மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கோடியக்கரையில் 5 மீனவர்கள் மாயமானதால் மீனவ கிராமங்களில் பதற்றம், பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: