சென்னை: தொழிலாளர்கள் உரிமை கோராத காரணத்தால் கடந்த நிதி ஆண்டில் பல்வேறு நிறுவனங்கள் 5 கோடி நிதியை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு திருப்பி செலுத்தியுள்ளன. அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் அடங்கும். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிலாளர் நல நிதியாக ஆண்டு ஒன்றுக்கு 10 செலுத்த வேண்டும். இதேபோன்று தொழிலதிபர்கள் ஒரு தொழிலாளிக்கு ₹20 செலுத்த வேண்டும். அரசு தன்னுடைய பங்குத் தெகையாக 10 செலுத்தும்.
இதன் மூலம் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதை தவிர்த்து தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி தேர்வுக்கான கட்டணம், விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.