சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்கிய வழக்கில் அந்த வீட்டின் சாவியை ஐகோர்ட் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தீபாவும் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக திறக்கலாம். ஆனால், வழக்கு முடியும்வரை அந்த இல்லத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது. திறப்பு விழா முடிந்த பின், வேதா நிலையத்தின் சாவியை சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.