தெருவில் ஓடுது கழிவுநீர் வாறுகால் அமைக்க வேண்டும்-மணியக்காரன்பட்டி மக்கள் வலியுறுத்தல்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டி கிராமத்தில் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. எனவே கழிவுநீர் வாறுகால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே போடிதாசன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணியக்காரன்பட்டி கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்பகுதியில் உள்ள சர்ச் தெருவில் கழிவுநீர் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் கழிவுநீரில் புழுக்கள் மற்றும் கொசுக்கள் உருவாகி பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், எங்களது பகுதியில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது.

ஊராட்சி நிர்வாகம் கழிவுநீரை கடந்த 6 மாதங்களாக அகற்றாமல் உள்ளது. இதனால் எங்களது பகுதியில் உள்ள 4 சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்களது பகுதிக்கு கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவத்தனர்.

Related Stories: