ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மண்ணச்சநல்லூர்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் உலா வந்தார். விழாவின் 4ம் நாளான கடந்த 22ம் தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்திரவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. 7ம் நாளான நேற்று முன்தினம் திருச்சிவிகையில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.இதையொட்டி இன்று அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வந்தார். காலை 4.45 மணிமுதல் காலை 5.15 மணி வரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார். பின் சரியாக காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கர், ரங்கா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேரில் நம்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார்.அதன் பின்னர் தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்தது. நாளை 28ம் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Related Stories: