கோயம்பேடு சிஎம்டிஏ அலுவலக கட்டிடத்தில் நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகம் ஜன.27ல் இடமாற்றம்

சென்னை: நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகம் வரும் 27ல் கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இடமாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலையில் செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடத்தில் டிடிசிபி எனப்படும் நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும், அந்த அலுவலகத்தில் ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் இருந்தது. இந்த சூழலில் தற்போத இந்த டிடிசிபி அலுவலகத்தை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் வரும் 27ம் தேதி முதல் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இடம் மாற்றம் செய்யப்படுவதை முன்னிட்டு வரும் 27ம் தேதி மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை மகா கணபதி ஹோமம் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தவறாறு கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்பின்னர் வழக்கம் போல் தற்போது உள்ள கட்டிடத்தில் அலுவலக பணிகள் தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு அலுவலகத்தில் கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்து இருப்பதும், அதில் ஊழியர்கள் கலந்து கொள்ளுமாறு சுற்றறிக்கையாக அனுப்பி இருப்பதும் அரசு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: