தாம்பரம்: சென்னை மேற்கு தாம்பரம், மாந்தோப்பு, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரீகன் (35). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 17ம் தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது 16 வயது சிறுவன் ஒருவன் பைக்கில் வேகமாக வந்துள்ளான். அப்போது அந்த சிறுவனை நிறுத்தி குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏன் வேகமாக வருகிறாய் என ரீகன் தட்டிக் கேட்டதையடுத்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சிறுவன் தாம்பரம் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அபராதம் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.
ஆனால், எப்படியாவது பழிவாங்க வேண்டுமென எண்ணிய சிறுவன், அவரது நண்பர்கள் இருவரை அழைத்துச் சென்று கத்தியால் ரீகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ரீகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேற்கு தாம்பரம் மீனாம்பாள் தெரு பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரின் 16 வயது மகன், மேற்கு தாம்பரம், சிவராஜ் தெருவை சேர்ந்த குணசேகரன் (18), மேற்கு தாம்பரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த சேஷன் (20) ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.