2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!: காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து பேச இருப்பதாக தகவல்..!!

டெல்லி: 2 நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். இன்று மாலை 7.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசவிருக்கிறார். நாளை காலை பிரதமர் நரேந்திர மோடியையும் முதல்வர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம் என்பது பிப்ரவரி 1 வாரத்தில் அடிக்கல் நாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிழையையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் நேரில் வழங்கவுள்ளார். அதேபோல வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் திறப்பு விழாவிற்கும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி அழைக்கவிருக்கிறார்.

தொடர்ந்து நிதி விடுவிப்பு குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு ரீதியான பயணம் என்றாலும் கூட இந்த 2 நாட்களில் அரசியல் ரீதியாகவும் பல்வேறு முக்கியமான ஆலோசனைகள் என்பது இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சரை இன்று மாலை சந்திக்கவுள்ள நிலையில், ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி என்பது இறுதிப்படுத்தப்பட்டாலும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை என்பது இன்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதிமுக பாஜக கூட்டணியையும் உறுதி செய்வது குறித்து பேசுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: