தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே விசைப்படகு கட்டும் தளம் உள்ளது. இங்கு விசைப்படகுகள், பைபர் படகுகள் உள்ளிட்டவை பழுதும் பார்க்கப்படும். இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தளத்தை சுற்றி குப்பை, பிளாஸ்டிக், மரத்துண்டுகள் போன்ற கழிவுப்பொருட்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர், சிறிது நேரத்தில் பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதனை பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ராயபுரம், தண்டையார்பேட்டை, எஸ்பிளனேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், படகுகள் பழுதுபார்க்கும் இடம் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பை மற்றும் கழிவுப்பொருட்களால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.