16 நாட்கள் ஆகியும் சம்பளம் இல்லை அரசு உதவி பொறியாளர்கள் அதிருப்தி

சென்னை: மாதம் பிறந்து 16 நாட்கள் ஆகியும் சம்பளம் வழங்கவில்லை என அரசு துறையின் கீழ் பணியாற்றும் உதவி பொறியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பொதுப்பணி, வேளாண், நெடுஞ்சாலை, மீன்வளம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரைபடி புதிய ஊதிய விகிதம் கடந்த அக்டோபர் மாதம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த புதிய ஊதியம் மூலம் ஒவ்வொரு பொறியாளருக்கும் குறைந்தது 10 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை ஊதியம் குறைக்கப்பட்டது. இது பொறியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, புதிய ஊதிய விகிதம் நிர்ணயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் பொறியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைக்கு கொண்டுவர இடைக்கால தடை விதித்தது. மேலும், ஜனவரி 12ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரனைக்கு வரும் என்று தெரிவித்தது. இதனால், ஜனவரி 16ம் தேதி ஆகியும் உதவி பொறியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படாமல் உள்ளது. எனவே, நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவினை மதித்து ஏற்கனவே வழங்கிய பழைய ஊதியத்தையே எந்தவொரு குறைப்பும் இன்றி விரைவில் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: