வாகனங்கள் திருடிய வாலிபர் கைது: 8 பைக் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பைக்குகளை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம், குமரக் கோட்டம் பஸ் நிலையம் உள்பட பல பகுதிகளில் பைக்குகள் திருடுபோயின. இதுதொடர்பாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதை தொடர்ந்து, சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார், நகரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் நேற்று அதிகாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை மறித்து நிறுத்தி விசாரித்தனா்.

ஆனால் அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், வேலூர், கேகே நகரை சேர்ந்த சசிக்குமார். காஞ்சிபுரத்தின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்ட பைக்குகளை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், குடியாத்தம், அடுக்கம்பாறை உள்பட பல பகுதிகளிலும் வாகன திருட்டில்  ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சசிக்குமாரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்படி 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: