பொங்கல் சிறப்பு பஸ்கள் மூலம் முதல் நாளில் 1 லட்சம் மக்கள் பயணம்: தகவல் பெற 24 மணி நேர சேவை மையம்

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று தொடங்கியது. நேற்று முதல் வரும் 13ம் தேதி வரையில் தினசரி இயங்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து சம்மந்தப்பட்ட மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படுகிறது.இப்பேருந்துகளின் இயக்கம் நேற்று தொடங்கிய நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களுக்கு பயணித்துள்ளனர். இதேபோல் சுமார் 1 லட்சம் பேர் பல்வேறு தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதற்கு நடப்பாண்டில் கோவிட்-19 பரவல் ஏற்பட்டதே காரணமாக கூறப்படுகிறது. மேலும் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்களை 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். மேலும் பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: