பள்ளிகள் திறப்பு இன்று அறிவிப்பு வெளியாகும்? கல்வித்துறை தகவல்

சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து பொதுமக்கள் தெரிவிக்க கருத்து கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட  அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தனது முடிவை வெளியிடுவார் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே தமிழகத்திலும் பள்ளிகளை திறந்து 10  மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தலாம்  என்று அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, கடந்த 6 ம் தேதி முதல் 8ம் தேதி வரை மீண்டும் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து கேட்பில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளை திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கேட்பில் பெறப்பட்ட கருத்துகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் திரட்டி, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தனர்.  

32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அந்த கருத்துகளை பெற்று, சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை பட்டியலிட்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு  பள்ளிக்கல்வி இயக்கக அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். அதன்மீது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்து முதல்வருக்கு தெரிவிக்க உள்ளனர். இதற்கான ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதையடுத்து பள்ளிகள் திறப்பதா வேண்டாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அல்லது நாளை தனது முடிவுகளை அறிவிப்பார்.

Related Stories: