பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கிய அதிமுக பிரமுகரிடம் சிபிஐ விடிய விடிய விசாரணை: போலீசார் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு

கோவை: பொள்ளாச்சி இளம்பெண்களை கடத்தி, பண்ணை வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் 2 ஆண்டுக்கு பின் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம் (34), அ.தி.மு.க. பொள்ளாச்சி நகர முன்னாள் இணை செயலாளர் ஹேரன்பால் (28), அ.தி.மு.க. உறுப்பினர் பாபு (29) ஆகியோர் கடந்த 5ம் தேதி சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோபி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில், ஹேரன்பாலை சி.பி.ஐ. போலீசார், 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டனர். அதன்படி, நேற்று கோவை மகிளா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி நந்தினிதேவி, 2 நாள் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, ஹேரன்பாலை, கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள ரகசிய அறையில் விசாரணை நடத்தினர். பாலியல் விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது?

அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த நபர்கள், எப்படி இவ்வளவு பேர் ஒன்று சேர்ந்து மிரட்டலில் ஈடுபட்டு வீடியோ எடுத்தீர்கள்? வீடியோக்களை யார் யாருக்கு அனுப்பி வைத்தீர்கள்? என அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு, விசாரணை நடத்தினர். பல கேள்விகளுக்கு, பதில் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ‘‘இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 5 பேர் ஜாமீனில் விடுவிக்கப்படவில்லை. எங்களையும் ஜாமீனில் விடமாட்டீர்கள். உங்களுக்கு பதில் தர மாட்டேன்’’ என கூறி அடம் பிடித்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் அருளானந்தம், ஹேரன்பால், பாபு ஆகியோர் கைதானபோது, ஹேரன்பால் மட்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். அதனால், அவரை மட்டும் காவலில் எடுத்து விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

* நேரில் பார்த்த சாட்சிகள் யார்?

அருளானந்தம், ஹேரன்பால், பாபு உள்ளிட்டோர் பொள்ளாச்சி அருகே குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு பெண்களை அழைத்துச்சென்று மிரட்டி பலாத்காரம் செய்திருப்பதாக தெரிகிறது. அந்த இடங்களுக்கு சென்று வந்தபோது, சிலர், இவர்களை நேரில் பார்த்துள்ளனர். அதன் அடிப்படையில் நேரில் பார்த்தவர்களை சாட்சிகளாக சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: