முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்டது வண்டலூரில் புலிக்குட்டி உயிரிழந்தது: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்கார வனச்சரகத்தில் உள்ள சீமர்குழி ஓடை பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவலறிந்த வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தபோது பெண் புலி இறந்து கிடந்த இடத்திற்கு அருகே பிறந்து சில நாட்களே ஆன இரண்டு ஆண் புலி குட்டிகள் சுற்றி கொண்டிருந்தன.

வனத்துறை அதிகாரிகள் அந்த புலிகளை மீட்டு கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி இரவு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு ஆண் புலி குட்டிகளில் ஒரு ஆண் புலி குட்டி இறந்ததாக தகவல் பரவியது. ஆனால், இதற்கு பூங்கா அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த 2 புலிக்குட்டிகளில் ஒரு ஆண் புலிக்குட்டி கடந்த சில நாட்களாக உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டு மிகவும் மெலிந்து காணப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் கடந்த 5ம் தேதியே ஒரு ஆண் புலி குட்டி இறந்துள்ளது.

Related Stories: