முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிப்பு கண்டித்து இலங்கை தூதரகம் இன்று முற்றுகை: தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை கண்டித்து இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது. இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் நினைவு தூபி அமைக்கப்பட்டது. இந்த நினைவுதூபி நேற்று முன்தினம் இரவோடு, இரவாக இலங்கை அரசால் இடித்து தள்ளப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தமிழக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரைமட்டமாக்கப்பட்டதை கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணியளவில் நடக்கும் இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: