தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் முன்னிலை வகித்தார். மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், வெல்ல பிரசாத், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஜெயக்குமார் எம்பி, பொருளாளர் ரூபி மனோகரன், சென்னை மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், எம்.பி.ரஞ்சன்குமார், நாஞ்சில் பிரசாத், டெல்லிபாபு, அடையாறு துரை, முத்தழகன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 75 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: மாவட்ட தலைவர்கள் முழுமையாக பாடுபட வேண்டும். அவர்களுக்கு முழு அதிகாரம் தரப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம். எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை கட்சி தலைமை பேசி முடிவு செய்யும். அதைப்பற்றி மாவட்ட தலைவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நமக்கு தேவையான தொகுதிகளை கேட்டு பெறுவோம். சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற கடுமையாக உழைக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எந்த உதவி செய்யவும் ராகுல்காந்தி தயாராக இருக்கிறார் என்றார்.

கட்சியை விமர்சித்தால் நடவடிக்கை

வட சென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் பேசுகையில்,‘‘வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கட்சியை மீறி பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அமைச்சர் மகனாக இருந்தாலும் சரி. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரசின் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி தான் வெளியிட்டுள்ளார். அவ்வாறு விமர்சிப்பவர்கள் சோனியாவை ஏற்றுக் கொள்ளவில்லையா?” என்றார்.

Related Stories: