திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவிட் 19 தடுப்பூசி அளிப்பதற்காக ஒத்திகை முகாம் திருவள்ளுர் சுகதார மாவட்டத்தில் திருவள்ளுர் மருத்துவக் கல்லூரி வளாகம், கல்யாணகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகதார நிலைய வளாகம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் வானகரம் அப்பலோ மருத்துவமனை வளாகம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை முகாம் அமைக்கப்பெற்று ஒவ்வொரு முகாமிலும் 25 நபர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி மருந்து வழங்கும் ஒத்திகை நடைபெற்றது. ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டம் செயல்படுத்தும் போது ஏற்படும் சவால்களை அடையாளம் கண்டு, அதனை நிவர்த்தி செய்வதே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும்.