சுரானா நிறுவனத்தில் தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னை: சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்த குற்றச்சாட்டை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். அந்த தங்கம் அதன் லாக்கரில் வைக்கப்பட்டது. இதற்கிடையே சுரானா நிறுவனம் தொழில் வளர்ச்சிக்காக எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேன்டர்டு சார்ட்டர்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் கடனாக வாங்கிய 1,160 கோடியை திரும்ப செலுத்தாமல் இருந்தது. பின்னர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்பனை செய்து வங்கிகளின் கடன்களை அடைக்க உத்தரவிட்டது. அதன்படி சீல் வைக்கப்பட்ட சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது.

103.864 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது. இது குறித்து ராமசுப்பிரமணியன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மாயமான 103 கிலோ தங்கம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், சுரானா நிறுவனத்தில் தடய அறிவியல் துறை தலைவர் ஹேமலதா தலைமையிலான 3 அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் தொழில்நுட்ப அதிகாரிகளும் உடனிருந்தனர். சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் முன்னிலையில், லாக்கரில் கள்ளச்சாவி போட்டு தங்கம் திருடப்பட்டதா என தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று மாலை வரை ஆய்வு நடந்தது. தடய அறிவியல் துறை தலைவர் ஹேமலதா அளிக்கும் அறிக்கையின்படிதான் வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்றனர்.

Related Stories: